சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புதன்கிழமை வீட்டில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காளையார்கோவில் அருகே உள்ள நென்மேனி கிராமத்தைச் சேர்ந்தவர் காசி (58). இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும் இவரது மனைவி பாண்டியம்மாளும் (55) நென்மேனியில் உள்ள காசியின் தாயார் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளனர். இதையடுத்து பாண்டியம்மாள் அவரது வீட்டுக்குள் புதன்கிழமை அதிகாலை ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் காளையார்கோவில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பாண்டியம்மாளின் கணவர் காசி சம்பவ இடத்தில் இல்லாததால் குடும்பப் பிரச்னை காரணமாக இந்த கொலை நடைபெற்றதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.