சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயில் பங்குனி உத்திர விழாவில் வியாழக்கிழமை மாலை தேரோட்டமும், இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி பவனி வருதலும் நடைபெற்றது.
இக் கோயிலில் பங்குனி உத்திர விழா கடந்த 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் ராமலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பங்குனி உத்திர தினத்தன்று நடைபெற்ற தேரோட்ட விழாவில் உற்சவர் ராமலிங்க சுவாமிகள் அலங்காரத்துடன் தேருக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தேர் சுற்றி வந்து இரவு நிலையை அடைந்தது. அதன்பின் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை இரவு ராமலிங்க சுவாமிகள் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார். மக்கள் வீடுகளின் முன்பு சுவாமியை வரவேற்று பூஜைகள் நடத்தி வழிபட்டனர். தேரோட்ட விழாவில் கட்டிக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.