கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணினி மற்றும் இணைய தள வசதி வழங்காத நிலையில் இ-அடங்கல் பதிவேற்றப் பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று புகார் தெரிவித்து தேனியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலர்
முருகன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் மதுக்கண்ணன், தேனி வட்டாரச் செயலர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணினி மற்றும் இணைய தள வசதி வழங்காததால் இ-அடங்கல் பதிவேற்றப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, சில இடங்களில் மட்டும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மடிக் கணினி பயனற்ற நிலையில் உள்ளது, கிராம நிர்வாக அலுவலர்கள் தனியார் கணினி மையங்களில் சொந்த செலவில் இணைய தள சான்று பரிந்துரைகளை மேற்கொள்ளும் நிலை உள்ளது என்று புகார் தெரிவித்தும், கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்கப்படாது என்ற அரசு உத்தரவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.