தகவல் அறியும் உரிமை சட்டத்தை சிறப்பாக பயன்படுத்தி பயனடைந்த போடியை சேர்ந்த சமூக ஆர்வலருக்குதகவல் ஆணையம் சார்பில் திங்கள் கிழமை சிறந்த பயன்பாட்டாளர் விருது வழங்கப்பட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை பெறுபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் தகவல்அறியும் உரிமைச்சட்டத்தின்14ஆம் ஆண்டு விழாவைக்கொண்டாடும் விதமாகவும் அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சி துறை சார்பில் அதிக அளவில் தகவல்களை பெற்று பயனடைந்தவர்களுக்கு விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக தமிழகம் முழுதும் தேர்வு செய்யப்பட்ட 20 பேருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் நடைபெற்றது. இதில் போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி மகன் ராமகிருஷ்ணனுக்கு தமிழக தகவல் ஆணையத்தின் முதன்மை தலைமை தகவல் ஆணையரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான எம்.ஷீலா பிரியா விருது மற்றும் ரொக்க பரிசு வழங்கி வாழ்த்தினார்.
ராமகிருஷ்ணன்அதிக அளவில் பொது மக்கள் நலனுக்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களை அனுப்பி தகவல்களை பெற்று பயனடைந்தவர். இதன் மூலம் வாரிசு சான்று பெற்றுத் தருதல், பேருந்து கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். இந்தியன் குரல் அமைப்பின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் சமூக ஆர்வலராகவும் உள்ளார்.
விருது பெற்ற ராமகிருஷ்ணனை இந்தியன் குரல் அமைப்பின் நிர்வாகி சிவராஜ் மற்றும் போடி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.