ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு கிராமத்தில் உரிய மருத்துவக் கல்வித் தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தவரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
கடமலைக்குண்டுவில் வசிப்பவர் தங்க வணங்காமுடி. இவர், உரிய மருத்துவக் கல்வித் தகுதியின்றி இதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அலோபதி மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், மாவட்ட துணை ஆட்சியர் (பயிற்சி) தினேஷ்குமார் கடமலைக்குண்டுவில் உள்ள மருத்துவமனையில் சோதனை நடத்தினார். அப்போது தங்க வணங்காமுடி உரிய மருத்துவக் கல்வி தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து துணை ஆட்சியர் உத்தரவின் பேரில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில், கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து தங்க வணங்காமுடியை கைது செய்தனர்.