தமிழக - கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பில் மத்திய அதிவிரைவுப் படையினரின் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
லோயர்கேம்ப், கூடலூர் மற்றும் கம்பம் நகர் பகுதிகளில் அதிவிரைவுப் படையான (ஆர்.ஏ.எப்.) இரண்டாம் ராணுவப் படையினரின் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்படையினரின் தலைமையகம் கோயம்புத்தூரில் உள்ளது. உத்தமபாளையம் காவல் துணைக்கோட்டம் உள்ளிட்ட தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையப் பகுதிகளில் நடைபெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளின்போது, இந்த அதிவிரைவு படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
பட்டாலியன் 105 எனப்படும் இந்த படை பிரிவில் 240 காவலர்கள் உள்ளனர். மாவட்ட அளவில் நடைபெறும் அனைத்து விதமான நிகழ்வுகளின்போது, இரண்டாம் ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு அழைக்கப்படுவார்கள். தற்போது முன்னெச்சரிக்கையாக இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது என உத்தமபாளையம் காவல் துணைக்கோட்ட கண்காணிப்பாளர் எம்.சீமைச்சாமி
தெரிவித்தார்.