பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணைப் பகுதியில் விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் மஞ்சளாறு அணையில் தேக்கப்பட்டு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் விவசாயப்பணிக்கு ஆதாரமாக உள்ளது. கடந்த அக். 24 ஆம் தேதி பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 10 கன அடியாக உள்ளது. பாசனத்துக்காக 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து தற்போது, 48.65 அடியாக உள்ளது. இதனால் வருங்காலங்களில் சாகுபடிக்கு நீர் போதுமான அளவு இருக்குமா என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறியது:
மஞ்சளாறு அணையிலிருந்து 143 நாள்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், அணைக்கு நீர்வரத்து 10 கன அடியாக உள்ளது. ஆனால் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.
இனி, அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்றனர்.