தேனியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணை எண் 56 இன் நகலை எரித்து போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஞான.திருப்பதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் முகமது அலி ஜின்னா, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலர் செல்வம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையிலும் , அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்திலும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 56 ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அரசாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில பொருளாளர் பே.பேயத்தேவன், வருவாய் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் பாலமுருகன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.