போடிமெட்டு மலைச்சாலையில் வெள்ளிக்கிழமை ஜீப் கவிழ்ந்ததில் தோட்டத் தொழிலாளர்கள் 9 பேர் காயமடைந்தனர்.
இச்சாலை வழியாக நூற்றுக்கணக்கான ஜீப்கள் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் கேரள பகுதியில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வார்கள். இதில் வெள்ளிக்கிழமை காலை போடி சிலமலை அருகே மணியம்பட்டி கிராமத்திலிருந்து ஒரு ஜீப்பில் 30 பேர் கேரள பகுதியில் உள்ள ஏலத் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றனர்.
போடிமெட்டு மலைச்சாலை "எஸ்' வளைவு என்ற இடத்தில் ஜீப் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் ஜீப்பை ஓட்டிச் சென்ற மணியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி (39), தோட்டத் தொழிலாளர்கள் ரோஜா (19), வெள்ளையம்மாள் (35), ஆனந்தமணி (50), வீரமணி (33), ராமுத்தாய் (46), ராஜம்மாள் (47), பாண்டியம்மாள் (42), பிரேமா (32) ஆகியோர் காயமடைந்தனர்.
இவர்களில் மாரிச்சாமி, ரோஜா, வெள்ளையம்மாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து குரங்கணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.