தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி அருகே உள்ள ஆனைமலையன்பட்டியில் சிறுமியை கட்டாயத் திருமணம்
செய்து கர்ப்பிணியாக்கிய இளைஞர் மற்றும் அவரது தாயார் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து, தந்தையை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஆனைமலையன்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் யோகேஷ்வரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி அச்சிறுமியின் குடும்பத்தினர் வெளியூர் சென்றுவிட்டனராம். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, யோகேஷ்வரன், அவரது தந்தை முருகன், தாயார் விஜயா, உறவினர் சண்முகம், நண்பர் இளவரசன் ஆகியோர் சென்று இழுத்து வந்து தங்களது வீட்டில் வைத்து கட்டாயத் திருமணம் செய்தனராம். தற்போது, அச்சிறுமி 2 மாத கர்ப்பமாக உள்ளார். இதனிடையே, மாமனார் முருகன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து, சிறுமி ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சுப்புலட்சுமி, முருகனை கைது செய்து, தப்பி ஓடிய விஜயா உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.