சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சிலமலை, நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் நடராஜ் (39). இவர், தனது வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமியை, வீட்டிற்குள் தூக்கிச் சென்று பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போடி மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து, நடராஜை கைது செய்தனர். 2017 ஆம் ஆண்டு ஆக.5 ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது.
இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி வி.திலகம், சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்திய நடராஜூக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.