மங்கலதேவி கண்ணகி கோயிலை புனரமைப்பு செய்து தொடர் வழிபாடுகளை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து ஆலய பாதுகாப்புக்குழு மாநிலத் தலைவர் தெய்வபிரகாஷ் கூறினார்.
தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அருகே உள்ள பளியன்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்கு செல்லும் வனப்பகுதி சாலையை பார்வையிட தெய்வபிரகாஷ் திங்கள்கிழமை பளியன்குடிக்கு வந்தார். அப்போது குமுளி போலீஸார் அவரிடம், வனப்பகுதியில் அனுமதியின்றி செல்லக்கூடாது, மீறி சென்றால் கைது செய்வோம் என்று கூறவே, சாலை ஆய்வை ரத்து செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து கண்ணகி கோயிலுக்கு 6 கிலோமீட்டர் தொலைவில் 12 அடி அகல சாலை வசதி இருந்துள்ளது.
காலப்போக்கில் இந்த சாலை வசதி மறைக்கப்பட்டுவிட்டது, இந்த சாலையை மீண்டும் அமைக்க வேண்டும், கோயில் புனரமைப்பை தமிழக அரசே ஏற்று செய்ய வேண்டும், அதற்கு இந்து ஆலய பாதுகாப்புக்குழு முயற்சி எடுக்கும் என்றார்.
அவருடன் குழுவின் மாநில அமைப்பாளர் சுடலைமணி, மாவட்ட செயலாளர் தி.பா. ராஜகுருபாண்டியன், துணைத்தலைவர் கே.பி.முத்தையா, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.