தேனி அருகே வடபுதுப்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் திங்கள்கிழமை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
வடபுதுப்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகுணாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் வடபுதுப்பட்டியில் உள்ள சில வீடுகளில் சோதனை நடத்தினர்.
இதில், வடபுதுப்பட்டியைச் சேர்ந்த சித்தன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. சித்தன் தனது வீட்டை வாடகைக்கு விட்டிருப்பதும், வீட்டை வாடகைக்கு எடுத்தவர்கள் அங்கு புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருள்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்து, புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.