தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்ற 6 மாத ஆண் குழந்தை சிகிச்சைக்குப் பின், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி இக்குழந்தை ஆதரவற்று கிடந்ததைக் கண்டு இம்மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மீட்டனர். இதையடுத்து இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் அக்குழந்தை, தமிழக அரசின் தொட்டில் குழந்தைகள் வளர்ப்புத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. பின்னர் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அக்குழந்தை பராமரிக்கப்பட்டது.
அப்போது இக்குழந்தை மனவளர்ச்சி குன்றியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதன்பின்னர் அந்த குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலையிலும், மனவளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் இளங்கோவன், குழந்தைகள் நல மருத்துவர் செல்வக்குமார், இணைப் பேராசிரியர் சிவக்குமரன் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் முன்னிலையில் அந்த குழந்தை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.