மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் புதன்கிழமை நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாரபட்சத்துடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இப்பேரூராட்சி வழியாக போடி, குச்சனூர் ,உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்திருப்பதாக வந்த புகாரின் பேரில் புதன்கிழமை போடிசெல்லும் வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் பொக்லையன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டன. மேலும் கால்வாயை மறைத்து கட்டப்பட்ட கட்டடங்களும் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றத்தில் பாரபட்சம்: பேரூராட்சியின் பேருந்து நிறுத்தம், உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் வழித்தட சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தும் அவற்றை அகற்ற முன்வரவில்லை. ஆனால் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றி இருப்பது பாரபட்சம் என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே, பாரபட்சமின்றி மார்க்கையன்கோட்டை பேரூராட்சி வழியாக செல்லும் நெடுஞ்சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் முழுமையாக அகற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.