தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் சாலையில் இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் பெண் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
க.புதுப்பட்டி வடக்கு காலனியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (37). இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுல்தானிய எஸ்டேட்டில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். சனிக்கிழமை க.புதுப்பட்டியில் உறவினரின் இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மனைவி செல்வியுடன் (30) இரு சக்கர வானத்தில் வந்தார். கம்பம் கூடலூர் நெடுஞ்சாலையில் வரும்போது, இவர்களின் பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த கூடலூரைச் சேர்ந்த ராஜாமுகமது (47) இவர்களை முந்திச் செல்ல முயன்றார். அப்போது இரண்டு வாகனங்களும் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த செல்வியை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்தார்.
இது குறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முனியம்மாள் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.