போடியில் வீடு புகுந்து சமையல் எரிவாயு உருளையை திருடியவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
போடி தலைமை தபால் நிலையம் தெருவில் வசிப்பவர் தெய்வம் (64). இவர் பகலில் வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கியுள்ளார். அப்போது மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து சமையல் அறையில் இருந்த காலி சமையல் எரிவாயு உருளையை திருடிச் சென்றுள்ளார்.
அருகில் இருந்தவர்கள் இதைப் பார்த்து அவரைப் பிடித்து போடி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் திருடிய நபர் போடி புதூரைச் சேர்ந்த சாகுல் மகன் அக்கீம் (57) எனத் தெரிந்தது.
இதையடுத்து தெய்வம் அளித்த புகாரின் பேரில் போடி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து அக்கீமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.