தேனி மாவட்டம் சின்னமனூரில் திங்கள்கிழமை அறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சின்னமனூரில் நகாரட்சி பகுதியில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும், சீப்பாலக்கோட்டை சாலை, முத்தாலம்மன் கோயில், கண்ணாடிமுக்கு உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட வார்டுகளில் முற்றிலுமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இது சின்னமனூர் மின்வாரியத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் சீப்பாலக்கோட்டை சாலையில் மறியிலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு வந்த சின்னமனூர் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்வாரிய உழியர்கள் மூலமாக உடனடியாக சரிசெய்து மின்சாரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.