உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 19) மாசி மகத்தேரோட்டம் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர்- ஞானாம்பிகை கோயில் மாசி மகத்தேரோட்டத் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப். 8) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள் திருவிழாவின் போது அனைத்து சமுதாயம் சார்பில் தனித் தனியாக மண்டகப்படி நடைபெற்றது. இதில், சுவாமி அம்மனை அலங்காரம் செய்து முக்கிய வீதிகளில் மின்னொளியில் நகர்வலம் வரச்செய்யப்பட்டது.
திருக்கல்யாணம்:மாசித்தேரோட்டத்தின் முக்கிய நிகழ்ச்சியாக 11 ஆவது நாள் திங்கள்கிழமை கோயில் நிர்வாகம் சார்பில், சுவாமி அம்மனின் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணக்கோலத்தில் திருக்காளத்தீஸ்வரர்- ஞானாம்பிகையை பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தின் போது பெண் பக்தர்களுக்கு மாங்கல்யத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டது.
தேரோட்டம்: திருவிழாவின் 12 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 6 மணி அளவில் சுவாமி அம்பாள் ரதம் ஏறுதல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது.தேரோட்டத்தின் போது உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், கம்பம், க.புதுப்பட்டி, சின்னமனூர் என மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். உத்தமபாளையம் பேரூராட்சி சார்பில், தேரோட்டம் நடைபெறும் முக்கிய சாலைகளான தேனி சாலை, பேருந்து நிலையம், தேரடி, கோட்டை மேடு, வடக்குத் தெரு, சுங்கச்சாவடி போன்ற பகுதிகளில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.