ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை கல்லூரி வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள நரியூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி சென்னியம்மாள் (66). இவருக்கு கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்துக்கு வந்துள்ளார். அப்போது சாலையோரம் நடந்து சென்ற சென்னியம்மாள் மீது அவ்வழியே வந்த கல்லூரி வாகனம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடமலைக்குண்டு போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் கல்லூரி வாகனத்தை ஓட்டி வந்த மூலக்கடையை சேர்ந்த சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.