தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை இரும்பு வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.15 ஆயிரத்தை மோசடி செய்த மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கம்பம் அருகே அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த அழகுராஜா பழைய இரும்பு பொருள்கள் வாங்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை கடைக்கு வந்த மர்மநபர் கம்பம் நகராட்சியில் பழைய இரும்பு பொருள்களை மலிவான விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.
அதை நம்பிய அழகுராஜா அவருடன் கம்பம் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய இரும்பு பொருள்களை காண்பித்து மர்மநபர் விலை பேசியுள்ளார். பின்னர் அழகுராஜாவிடம் ரூ.15 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு, ஆணையாளர் அறை அருகே அவரை அமர வைத்து விட்டு மர்மநபர் மாயமானார்.
வெகு நேரமாகியும் மர்மநபர் வராததால், அங்கிருந்த நகராட்சி அலுவலர்களிடம் அழகுராஜா விசாரித்த போதுதான் தன்னை மர்மநபர் மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து அழகுராஜா அளித்தப் புகாரின் பேரில் கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.