தேனியில் கடன் தொகையை திரும்பத் தருமாறு கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
பழனிசெட்டிபட்டி, தெற்கு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி முத்துமாரி (25). இவருக்கு பழனிசெட்டிபட்டி, லட்சுமிநகரைச் சேர்ந்த நாகராஜ் (30), ராஜா (47), பாலபிரபாகரன் (27), அரண்மனைப்புதூர் முல்லைநகரைச் சேர்ந்த ரமேஷ் (40) ஆகியோர் தனித் தனியே மொத்தம் ரூ.12 லட்சம் கடன் கொடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கடன் தொகையை திரும்பத் தருவதில் ஏற்பட்ட பிரச்னையில் நாகராஜ் உள்ளிட்ட 4 பேரும் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தேனி காவல் நிலையத்தில் முத்துமாரி புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் நாகராஜ் உள்ளிட்ட 4 பேர் மீதும் தேனி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து நாகராஜ், ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜா, பாலபிரபாகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.