உத்தமபாளையம் ஒன்றியம் பல்லவராயன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 24) நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா முன்னேற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், ஆய்வு செய்தார்.
பல்லவராயன்பட்டி ஏழைகாத்தம்மன் ஸ்ரீ வல்லடிக்கார சுவாமி கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளார் வீ.பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமைஆய்வு செய்தனர்.
அப்போது, ஜல்லிக்கட்டுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. அதில், வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடம், பாதுகாப்பு தடுப்பு இரும்பு கம்பி வேலிகள் உள்பட பல்வேறு முன்னேற்பாடுகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டி நிர்வாகிகளிடம், சேதமான பாதுகாப்பு இரும்பு தடுப்பு கம்பிகளை சீரமைக்க வேண்டும். வாடிவாசல் முன்பாக தென்னை நார்களை பரப்பி மாடுபிடி வீரர்கள் மட்டும் காளைகளுக்கு காயம் ஏற்படாமல் இருக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும். போட்டியில் காயம் ஏற்பட்டால் மாடு பிடி வீரர்கள் மற்றும் காளைகளை அழைத்து செல்ல உரிய அவசர வழிகளை முறையாக அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு ஆலோசனைகளை ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விழாவுக்கு முன்பாக அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெறும். மேலும், மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரேஅனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு விழாவிற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன என்றார்.