தேனியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து உயர்நீதிமன்றம் நியமித்த வழக்குரைஞர்கள் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை அளிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தேனியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் அவற்றை அகற்றும் நடவடிக்கைகள் குறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவில், மூத்த வழக்குரைஞர் வீராகதிரவன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். தேனி மீறு சமுத்திரம் கண்மாய், மந்தைக்குளம் கண்மாய், சிகுஓடை கண்மாய், தாமரைக்குளம், கண்ணிமார் கண்மாய், வீரப்பஅய்யனார் மலை ஓடை ஆகிய பகுதிகளில் இக்குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, தேனி வட்டாட்சியர் சத்தியபாமா, நகராட்சி ஆணையர் ராஜாராம் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக ஆய்வு குழுவினர் கூறியதாவது:
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தேனி மாவட்டம் முழுவதும் கண்மாய், குளம், நீர்தேக்கம், ஓடை, நீர்வரத்து வாய்க்கால் போன்றவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கலப்பது, சுற்றுச்சூழல் மாசு ஆகியவை குறித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். முதல் கட்டமாக தேனியில் ஆய்வை தொடங்கியுள்ளோம். தொடர்ந்து அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு நடைபெறும் என்றனர்.