தேசிய அளவில் நடைபெற்ற ஜூடோ போட்டிகளில் மூன்றாமிடம் பிடித்த போடியைச் சேர்ந்த பள்ளி மாணவருக்கு, கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடத்தினர்.
போடி அருகே திம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அமானுல்லா என்பவரின் மகன் யாசீர் (16). இவர், உத்தமபாளையத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜூடோவில் ஆர்வம் கொண்ட யாசீர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் பங்கேற்க தமிழகம் சார்பில் யாசீர் தேர்வு செய்யப்பட்டார். அதில் பங்கேற்ற யாசீர், தேசிய அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுச் சான்றும், பரிசும் வழங்கப்பட்டது.
அதையடுத்து, தமிழகம் திரும்பிய யாசீருக்கு விளையாட்டுத் துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரது சொந்த ஊரான திம்மிநாயக்கன்பட்டியில், மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில், திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான பா. சண்முகம், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்டத் தலைவர் அபுபக்கர் சித்திக் மற்றும் கிராம மக்கள், முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் பலரும் யாசீரை பாராட்டி வாழ்த்தினர்.