தேனி மாவட்டத்தில் 11 தனிப்பிரிவுக் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் தொடர்பான தகவல்களை திரட்டுவதில் தாமதம் ஏற்படுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உடனுக்குடன் தகவல்கள் அளிக்கும் வகையில் தனிப்பிரிவு காவலர்கள் காவல் நிலையங்கள் வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொடுக்கும் உளவு மற்றும் உள்ளூர் நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள் மாவட்ட காவல்துறைக்கு பேருதவியாக இருக்கும்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் கம்பம் வடக்கு , தெற்கு மற்றும் கூடலூர் வடக்கு உள்ளிட்ட தனிப்பிரிவு காவலர்கள் 11 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதனால் புதிய இடங்களில் பணியாற்றும் அவர்களால், அரசியல் கட்சி பிரமுகர்கள் அறிமுகம் இல்லாத நிலையில் உடனுக்குடன் தகவல்களை பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் தேர்தல் தொடர்பான தகவல்களை பெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் தேர்தல் நேரங்களில் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், சங்கங்களுடன் நெருங்கிய தொடர்புகளை பல ஆண்டுகளாக ஏற்படுத்தியுள்ள தனிப்பிரிவு காவலர்கள் இடமாற்றத்தால் பெரும் குழப்பம் நிலவி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.