தேனியில் உள்ள தனியார் எண்ணெய் ஆலையில் திங்கள்கிழமை இரவு கொதி கலனில் இருந்து தீப்பொறி பரவி தீ விபத்து ஏற்பட்டது.
தேனி, ரத்தினம் நகரில் கருணாகரன் என்பவருக்குச் சொந்தமான எண்ணெய் ஆலை, அட்டைப் பெட்டி உற்பத்தி நிறுவனம் உள்ளது. இந்நிலையில், எண்ணெய் ஆலையில் உள்ள கொதி கலனில் இருந்து சிதறிய தீப்பொறி அருகே உள்ள அட்டைப் பெட்டிகளில் பரவி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி ஆலை ஊழியர்கள் பாண்டியன், பால்பாண்டியன் ஆகியோர் காயமடைந்தனர். ஆலையில் பணியில் இருந்த 5 பெண் தொழிலாளர்கள் உள்பட 46 பேர் ஆலையில் இருந்து வெளியேறி உயிர் தப்பினர்.
ஆலையில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, வத்தலகுண்டு, மதுரை ஆகிய இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் 10 மணி நேரம் போராடி அணைத்தனர்.
எண்ணெய் ஆலையில் பலத்த தீ விபத்து ஏற்பட்டதால் ரத்தினம் நகர், அன்னஞ்சி, வடபுதுப்பட்டி ஆகிய பகுதிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. தீ விபத்து நடைபெற்ற இடத்தை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், திண்டுக்கல் டி.ஐ.ஜி., ஜோஷி நிர்மல்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டனர். விபத்துக்கான காரணம் மற்றும் சேதமதிப்பை தீயணைப்புத் துறையுடன் இணைந்து ஆய்வு செய்து வருவதாக அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் கூறினர்.