மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியின்போது தமிழகத்துக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என்று, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தேனி அருகே சுக்குவாடன்பட்டியில் புதன்கிழமை இரவு அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ப. ரவீந்திரநாத் குமார், ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் ஏ. லோகிராஜன் ஆகியோரைஅறிமுகம் செய்து வைத்து அவர் பேசியதாவது:
தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவால் வெற்றி பெற்ற 18 பேரும் கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் செய்துவிட்டு, இன்று செல்லாக்காசு போல இருக்கின்றனர். சபாநாயகர் அழைத்தபோதே வந்திருந்தால், அவர்களது பதவி தப்பியிருக்கும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற யாரும் அதிமுகவை எதிர்த்து வென்றதாக சரித்திரம் இல்லை.
கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக எப்போதும் நிபந்தனையுடனேயே கூட்டு வைக்கும். நாங்கள் நிபந்தனையின்றி கூட்டணி வைத்தபோதும், அவர்களுக்கு நன்றி இல்லை.
மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் இருந்த 10 ஆண்டு காலம் தமிழகத்துக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. தேனி மக்களவைத் தொகுதி, ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில், பெரியகுளம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மு. முருகன் கலந்துகொள்ளவில்லை. இவரை மாற்றுவதற்கு கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதால், அவர் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறினர்.