தேனி மாவட்டம் கூடலூர் வனச்சரகப் பகுதியில் குடிநீர் தேடி வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் தரை மட்டத் தொட்டிகளில், டேங்கர் லாரி மூலம் வனத்துறையினர் நீர் நிரப்பி வருகின்றனர்.
கூடலூர் வனச்சரக பகுதியில் மான், யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் உள்ளன. கோடை காலங்களில் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் நீர் வற்றி விடுவதால் வனவிலங்குகள் குடிநீர் தேடி, வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் நுழைகின்றன.
இதனால் குடிநீர் தேடி வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் விதமாக, வனத்துறையினர் காப்புக்காடு பகுதிகளில் உள்ள தரைமட்டத் தொட்டிகளில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லே உத்தரவின் பேரில், வனத்துறையினர் வண்ணாத்திப்பாறை வனப்பகுதியில் உள்ள தரை
மட்டத்தொட்டிகளில் சனிக்கிழமை டேங்கர் லாரி மூலம் தண்ணீர் நிரப்பினர்.
இதுகுறித்து வனச்சரகர் அன்பழகன் கூறியது: கோடை காலங்களில் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் நீர் வற்றிவிடுவதால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுகின்றன.
தற்போது வனப்பகுதியில் தரை மட்டத்தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படுவதால் வனவிலங்குகள் குடிநீர் தேடி ஊருக்குள் வருவது தடுக்கப்படும். மேலும் தரைமட்டத் தொட்டிகளில் உள்ள தண்ணீரை வனவிலங்குகள் குடித்துச் செல்லும் என்றார்.