பட்டாசு ஆலைகளைத் திறக்க பாமக வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க

விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பட்டாசு வெடிக்க நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் பட்டாசு தயாரிக்கவும், வெடிக்கவும் தடை இல்லை எனக் கூறியுள்ளது. மேலும்,  பேரியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருளைக்கொண்டு பட்டாசு தயாரிக்கக் கூடாது என்றும், கோயில், திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வெடிக்கப்படும் சரவெடி தயாரிக்கக்கூடாது என்றும்,  பட்டாசுகளை 2 மணி நேரமே வெடிக்க வேண்டும் என்றும், பசுமை பட்டாசுகளையே தயாரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்துள்ளது. பேரியம் நைட்ரேட் தரை சக்கரம், பென்சில் உள்ளிட்ட பட்டாசுகளை தயாரிக்கப் பயன்படுகிறது. பட்டாசுகள் முழுக்க முழுக்க கையால் தயாரிக்கப்படுகின்றன. இது, சிறு மற்றும் குறுந்தொழில் பட்டியலில் உள்ளது. உலகமயமாக்கல் கொள்கையால் சிறு மற்றும் குறுந்தொழில்கள்அழிக்கப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர்களும், தொழிலாளர்களும் 90 ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய இத்தொழிலை, பாதுகாக்காமல் அரசு விட்டுவிட்டது. இதனால், பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
பட்டாசுத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள இப்பிரச்னையை மத்திய- மாநில அரசுகள் தவிர்த்திருக்க முடியும். எனவே, பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் மூடப்பட்டுள்ள ஆலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com