ராஜபாளையத்தில் தேமுதிக சார்பில், கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்டச் செயலர் செய்யது காஜா செரீப் தலைமை வகித்தார்.இதில் சிறப்பு அழைப்பாளராக, மாநில தொழிற் சங்க இணைச் செயலர் ஆதிகேச பெருமாள் பங்கேற்று, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், கஜா புயல் நிவாரணத்துக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் உத்தரவை ஏற்று நிவாரணம் வழங்கிய மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியச் செயலர்கள், நகர, பேரூர் கழகச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய கழகப் பொருளாளர் பிரேம லதாவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
வரும் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு தொகுதி பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், தொகுதிவாரியாக புதிய உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்த வேண்டியும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
இதில், பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், நகரச் செயலர் குமார் உள்பட மாவட்டக் கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலர்கள் கலந்துகொண்டனர்.