விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் சீராகக் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சுழி ஊராட்சியில் 5 ஆயிரம் பேருக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீரானது, திருச்சுழியிலிருந்து தமிழ்ப்பாடி செல்லும் சாலையருகே பெரியகண்மாயை ஒட்டியுள்ள பேரீச்சம்பழ ஊற்று எனும் இடத்தில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், திருச்சுழியில் மேற்கு ரத வீதி உள்ளிட்ட மேடான பகுதிகளில் குடிநீர் குறைந்த அளவே வருவதாகப் புகார் எழுந்துள்ளது. வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் விநியோகிக்கப்படும் குடிநீர், மேடான பகுதியில் உள்ளவர்களுக்கு சரியாகக் கிடைப்பதில்லையாம். இதனால் சிரமத்துக்குள்ளாகும் இப்பகுதியினர், அதிக விலை கொடுத்து குடிநீர் பெற்று பயன்படுத்தும் நிலை உள்ளது.
இது குறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பல ஆண்டுகளாகவே குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, திருச்சுழி ஊராட்சிப் பகுதிகளுக்கு சீராகக் குடிநீர் விநியோகிப்பதுடன், கூடுதல் நேரம் குடிநீர் விடவேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.