விருதுநகர்-மல்லாங்கிணறு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகரிலிருந்து மல்லாங்கிணறு செல்லும் சாலையில் பாண்டியன் நகர், வில்லிபத்திரி உள்ளிட்ட ஏராளமான கிராம ங்கள் உள்ளன. மேலும், இப்பகுதியில் ஏராளமான சிறு குறுந் தொழில் நிறுவனங்கள், ஆலைகள், தனியார் பள்ளிகள் மற்றும் கேந்திரியா வித்யாலயா பள்ளி ஆகியவையும் உள்ளன. இதனால், இவ்வழியே தினந்தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். மேலும், தொழிற்சாலைகளில் பணி புரிவதற்காக இரு சக்கர வாகனம், மிதிவண்டி உள்ளிட்டவைகளில் ஏராளமானோர் செல்கின்றனர். இச்சாலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக சேதமடைந்தது. இதை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்காததால் தற்போது பெரிய பள்ளங்களாக மாறி விட்டன. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இச்சாலையை விரைவில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.