விருதுநகர் நகராட்சியில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால், அவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
விருதுநகர் நகராட்சிப் பகுதிகளில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 70 ஆயிரம் பொது மக்கள் வசிக்கின்றனர். மேலும், கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் மூலம் ஆங்காங்கு கொட்டப்படும் குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். விருதுநகர் நகராட்சியில் 109 நிரந்தர துப்புரவு பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 45 பேர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், துப்புரவு பணி மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு நகராட்சி சார்பில் கையுறை, காலுறை மற்றும் முகக் கவசம் ஆகியவை கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட வில்லையாம். இதனால், துப்புரவு பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி குப்பைகள் அள்ளுவது, வாருகால் சுத்தம் செய்வது, பாதாளச் சாக்கடை அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குமாறு பலமுறை கேட்டும் நகராட்சி நிர்வாகம் நிதி நிலையை காரணம் காட்டி வழங்க மறுப்பதாக துப்புரவு பணியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, விருதுநகர் நகராட்சியில் பணி புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு உபகர ணங்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.