விருதுநகர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்- 2 தேர்வை 16,974 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், சார்-பதிவாளர் நிலை-2, நகராட்சி ஆணையர் நிலை-2, தணிக்கை ஆய்வாளர், தொழில் கூட்டுறவு அலுவலர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-2 போட்டித் தேர்வு நடைபெற்றது.
விருதுநகர் வட்டத்தில் 18 தேர்வு மையங்கள், அருப்புகோட்டை வட்டத்தில் 19 தேர்வு மையங்கள், ராஜபாளையம் வட்டத்தில் 17 தேர்வு மையங்கள், சிவகாசி வட்டத்தில் 16 தேர்வு மையங்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் 12 தேர்வு மையங்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 51 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வுக்கு 22,117 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 16,974 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 5,143 பேர் தேர்வு எழுத வரவில்லை.
அனைத்து தேர்வு மையங்களிலும் தீவிரமாகக் கண்காணிக்க, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 82 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 82 ஆய்வு அலுவலர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 14 நடமாடும் குழுவினர், துணை ஆட்சியர் நிலையில் 14 பறக்கும் படை அலுவலர்கள் ஈடுபட்டனர். மேலும், 51 மையங்களிலும் தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய 59 விடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதேபோல், இத்தேர்வினை கண்காணிப்பதற்கு 4 அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள் வந்திருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம், சில தேர்வு மையங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.