விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக சார்பில் சாத்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொடர்பாக வாக்கு சாவடி முகவர்களை நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், தமிழக அரசின் தில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, சாத்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இளைஞர்கள் பணி புரிய வாய்ப்பளிக்க வேண்டும். அதிமுக கட்சியை எவராலும் அழிக்க முடியாது. திமுக தலைவர் கருணாநிதிக்கே தோல்வியை பரிசளித்தவர்கள் அதிமுகவினர். உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே.
இக்கட்சியை யாரும் அதட்டி ஆள முடியாது, அடக்கி ஆளவும் முடியாது. தமிழகத்தில் நடைபெற உள்ள 20 தொகுதிக்கான இடைதேர்தலில், சாத்தூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என்றார் அவர். இக்கூட்டத்தில் சாத்தூர் நகர செயலாளர் வாசன் டெய்சி ராணி, கிழக்கு ஒன்றியச் செயலாளர் சண்முக கனி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், வழக்குரைஞர் பிரிவு செயலாளர் சேதுராமானுஜம் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.