விருதுநகர், நாராயணமடம் தெருவில் உள்ள ஆண்கள் பொதுக் கழிப்பறையை நகராட்சி நிர்வாகம் இடிக்க முடிவு செய்துள்ளதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் நகராட்சியில் 26 ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் நாராயணமடம் தெரு உள்ளது. இங்கு நகராட்சி சார்பில் ஆண்களுக்கான பொதுக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், இந்த வார்டில் இன்னும் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்படவில்லை. இதனால், பெரும்பாலானோர், பொதுக் கழிப்பறையைத் தான் பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம், கழிப்பறையில் உள்ள மின் இணைப்பைத் துண்டித்து விட்டு, இரவோடு இரவாக இடித்து விட்டு, அந்த இடத்தில் மண் புழு உரம் தயார் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுக் கழிப்பறையை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இளநிலை பொறியாளர் பாலாஜி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆணையாளரிடம் தெரிவித்து மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.