விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள பெரிய கண்மாய்க்கான நீர்வரத்துக் கால்வாய்களைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை மையப் பகுதி, பெரிய தெரு, வடுகர்கோட்டை, தெற்குத்தெரு, குமரன் புதுத்தெரு, பழைய பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், பெரிய புளியம்பட்டி ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரமாகும் மழைநீரானது பிறமடை ஓடை, அகம்படியர் மகால் பகுதி ஓடை, கம்மவார் ஓடை ஆகிய வரத்துக் கால்வாய்கள் மூலம் பெரிய கண்மாயைச் சென்றடைகிறது.
ஆனால், இந்த 3 ஓடைகளிலும் இடையிடையே பல இடங்களிலும் மக்காத குப்பைகள், புதர்ச்செடிகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளன. இதனால், பெரிய கண்மாய்க்கான நீர்வரத்து குறைந்துள்ளது. பெரியகண்மாயை ஒட்டியுள்ள வடுகர்கோட்டை, தெற்குத்தெரு, ராமசாமிபுரம், கஞ்சநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300 ஏக்கர் விவசாயிகளும் பெரிய கண்மாய் நீரை நம்பியே பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், நீர்வரத்தின்றி விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, பெரிய கண்மாய்க்கான நீர்வரத்துக் கால்வாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.