நிலையூர்- கம்பிக்குடி கால்வாயில் தனியார் நிறுவனம் செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவியூர் பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்திடம் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக நிலையூர்- கம்பிக்குடி கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மதுரை மாவட்ட எல்லை முடியும் இடம் வரை தற்போது கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பருவ மழை பெய்து வருவதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தற்போது விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். ஆனால், எலியார்பத்தி அருகே தனியார் நிறுவனம் கால்வாயை ஆக்கிரமித்துள்ளது. இதனால், ஆவியூர், மாங்குளம், அரசகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள 3000 ஏக்கர் விளை நிலங்களுக்கு தண்ணீர் வரவில்லை. எனவே, கால்வாயில் உள்ள அந்த ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனர்.