அருப்புக்கோட்டை வட்டம் சிதம்பராபுரம் கிராமத்தில் சமுதாயக்கூடம் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கிராமத்தில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி சார்பில் சமுதாயக்கூடம் அமைத்துத் தரப்பட வில்லை. இதன்காரணமாக குடும்ப விழாக்களை ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்கள் அதிக வாடகை கொடுத்து வெளியூரில் திருமண மண்டபங்களில் நடத்த வேண்டி உள்ளது. சிலர் உள்ளூரிலேயே பந்தல் அமைத்தாலும் கிராமத்தில் பொதுக்கழிப்பிட வசதி இல்லாததால் திறந்தவெளியை பயன்படுத்த நேர்வதால்அதிக சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் கிராமத்தில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே இச்சூழலைத் தவிர்க்க தங்கள் கிராமத்தில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் பலனில்லை என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே நீண்ட காலக் கோரிக்கையான சமுதாயக்கூடம் அமைக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்குக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.