சிவகாசி நகராட்சியால் பொதுச்சுவர்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்கள் 6 ஆண்டுகளை கடந்து விட்டதால் அவை அழிந்து வருகின்றன. எனவே நகராட்சி சார்பில் சுவர்களில் மீண்டும் ஓவியங்கள் வரைந்து அழகுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசியில் பேருந்து நிலையம், நகராட்சிப் பள்ளி சுவர்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டு வந்தன. இதனை தடுக்கும் விதமாக கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய சிவகாசி நகராட்சி ஆணையாளர் கோவிந்தராஜ் இந்த சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைவதற்கு உத்தரவிட்டார். இதையடுத்து சிவகாசி நகராட்சி அலுவலகக் கட்டடச் சுவர், நகராட்சி காமராஜர் பூங்கா சுவர், காரனேசன் காலனி சிறுவர் பூங்கா சுவர், நகர காவல் நிலைய சுவர், அண்ணாமலைநாடார்-உண்ணாமலையம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளிச்சுவர் உள்ளிட்ட பகுதிகளில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டன.
நகராட்சி அலுவலகக் கட்டடத்தில் பறவைகள் மற்றும் குழந்தைகள் ஓவியமும், பூங்கா சுவரில் மிருகங்கள் ஓவியமும், பள்ளி சுவரில் உலகின் ஒன்பது அதிசயங்கள், திருக்குறள் மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், காவல் நிலைய சுவரில் சென்னை டி.ஜி.பி.அலுவலக ஓவியம், பேருந்து நிலைய சுவரில் இயற்கை காட்சி உள்ளிட்ட ஓவியங்கள் வரையப்பட்டன.
இதையடுத்து இந்த சுவர்களில் சுவரொட்டி ஒட்டப்படுவது நிறுத்தப்பட்டு, பார்ப்பதற்கு அழகாக காட்சியளித்தது. தற்போது இந்த ஓவியங்கள் வரையப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிவிட்டதால், ஆங்காங்கே சிதிலமடைந்து வருகின்றன.
பேருந்து நிலையத்தில் உள்ள ஓவியங்களின் மீது சமீபகாலமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது. அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதிலமடைந்து வரும் ஓவியங்களை சீரமைக்க வேண்டும் அல்லது புதிதாக ஓவியம் வரைய வேண்டும். இது நகரை அழகுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகும்.
எனவே இது குறித்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.