ராஜபாளையத்தில் இருசக்கர வாகனத்தை திருடியவரை வாகன உரிமையாளர் பொதுமக்கள் உதவியுடன் புதன்கிழமை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
ராஜபாளையம், சிங்கராஜாகோட்டை தெருவைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (49). விவசாயியான இவர் கடந்த இரு நாள்களுக்கு முன்பு வயலின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு விவசாயப் பணியில் ஈடுபட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தை காணவில்லையாம். இந்நிலையில் ராமசுப்பிரமணியன் புதன்கிழமை தென்காசி சாலையில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் ஒருவர் செல்வதை பார்த்துள்ளார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் முகவூரைச் சேர்ந்த கணேசன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.