ராஜபாளையம் அருகே பனை விதைகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரத்தில் சுழற்சங்கம் மற்றும் கிங் மேக்கர் சங்கம் சார்பில், பனை மரங்களை பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற பனை விதைகள் நடும் விழாவுக்கு, வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
இதில், ராஜபாளையம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் தங்கப்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, பனை விதைகளை நட்டு விழாவைத் தொடக்கிவைத்துப் பேசியது:
தமிழகத்தில் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் பிற்காலத்தில் சர்க்கரை நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பனங்கற்கண்டு மற்றும் கருப்பட்டியை பயன்படுத்த வேண்டும். மேலும், அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் பனை மரங்களை வளர்க்க தேவையான முயற்சிகள் எடுக்கப்படும் என்றார்.
விழாவில், நாடார் உறவின்முறை துணைத் தலைவர் செல்வராஜ், ரஞ்சித், விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.