அருப்புக்கோட்டை அருகே உள்ள இலங்கிப்பட்டியில் சேதமடைந்து பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதால் அத்தொடியை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள இலங்கிப்பட்டி கிராமத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பிரதான வீதியில் பழைய, பயன்பாடின்றிக் கைவிடப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. சேதமடைந்த இத் தொட்டிக்குப் பதிலாகப் புதிய 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த் தேக்கத் தொட்டி ஊரின் மேற்கே கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களாகப் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கைவிடப்பட்ட பழைய நீர்த் தேக்கத் தொட்டி மூன்று வருடங்களாகியும் அகற்றப்படாத நிலையில் உள்ளது.
அதன் அருகே பள்ளி மாணவர்கள் பலரும் காலை, மாலை வேளைகளில் விளையாடி வருகின்றனர். பொதுமக்களும் இத்தொட்டியின் கீழுள்ள பழைய குழாயடியில் வரிசையில் நின்று குடிநீர் பிடிக்கின்றனர். மேலும் இப்பகுதியில் அதிக வாகனப் போக்குவரத்தும் காணப்படுகிறது. எனவே இங்குள்ள சேதமடைந்த பழைய நீர்த் தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளதால் அதை விரைந்து அகற்றவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.