ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பணத் தகராறில் ஞாயிற்றுக்கிழமை ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கோட்டையூர், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் பாண்டியராஜ் (42). இவரது தகர செட் கடையை ரூ.32 ஆயிரத்திற்கு இதே இடத்தைச் சேர்ந்த முத்தையா மகன் ராஜ்குமார் என்பவருக்கு 3 மாதங்களுக்கு முன்னர் ஒத்திக்கு கொடுத்துள்ளார்.
ஆனால் ராஜ்குமார் கடையை நடத்தமால் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி ரூ.25 ஆயிரத்தை பாண்டியராஜ் திரும்பக் கொடுத்துள்ளார். மீதி பணத்தை செப். 20 ஆம் தேதி தருவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட நாளில் பாண்டியராஜ் பணத்தைத் தரவில்லை. ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பாண்டியராஜை, அரிவாளால் வெட்டிவிட்டு, ராஜ்குமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயமடைந்த பாண்டியராஜ் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து வத்திராயிருப்பு போலீஸார் ராஜ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.