தீபாவளி பண்டிகைக்கு 50 சதவீத போனஸ் வழங்கக் கோரி சிஐடியு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி தொழிற்சாலை ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பி.பாண்டி தலைமை வகித்தார்.
அதில், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் பணியாற்றிவரும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நியாயமான கூலி வழங்க வேண்டும்.
மேலும், தீபாவளி போனஸ் 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஸ்கே.கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலர் பி.என்.தேவா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மேலும் இதில், மாவட்ட துணைத் தலைவர் ஜே.லாசர், சிஐடியு மாவட்ட பொருளாளர் வி.ஆர்.செல்லச்சாமி உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.