கூரைக்குண்டி ஊராட்சி பகுதியில் குடிசை அமைத்து வாழும் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த பொதுமக்கள், அந்த இடத்தில் நிரந்தரமாக குடியிருக்க இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அ.சிவஞானத்திடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் அருகே கூரைக்குண்டு ஊராட்சிக்குள்பட்ட எம்ஜிஆர் காலனி, வி.வி.ஆர். காலனியில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். இந்நிலையில் கூரைக்குண்டு ஊராட்சி அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காலி இடம் உள்ளது.
தற்போது அந்த இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். ஏற்கெனவே, நாங்கள் குடியிருக்க இடமில்லாததால் அந்த இடத்தில் குடிசை போட்டு வாழ்ந்து வருகிறோம். எனவே, அந்த இடத்தில் எங்களுக்கு இலவச பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.