மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து ராஜபாளையம் வேளாண் உதவி இயக்குநர் சுப்பையா விவசாயிகளுக்கு அறிவுறுத்துகிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏப்ரல், மே, மாதங்களில் கோடை உழவு செய்தல் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். அனைத்து விவசாயிகளும் பருவத்தில் ஒரே சமயத்தில் விதைப்பு செய்ய வேண்டும். பல்வேறு நிலைகளில் விதைப்பு செய்தால் வளர்ச்சி நிலையில் உள்ள மக்காச்சோளப்பயிர்களில் அமெரிக்கன் படைப்பழு அதிக அளவில் தாக்கும். பேவோரியா பேசியானா மருந்தை 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் பூச்சி தாக்குதலை குறைக்கலாம். மக்காச்சோளம் விதைக்கும் போது அதனுடன் வயல் ஓரங்களில் தட்டைப்பயிறு, ஆமணக்கு, சூரிய காந்தி, சாமந்திப் பூ ஆகியவற்றை விதைப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
எனவே, அனைத்து விவசாயிகளும் கண்டிப்பாக ஊடுபயிர் மற்றும் வயல் ஓரப்பயிர் சாகுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் பயிர் விதைத்த 1 வாரம் முதல் 3 அல்லது 4 தினங்கள் இடைவெளியில் வயல் முழுவதும் நடந்து கண்காணித்து இலையின் மேற்புறம் அல்லது பின்புறம் காணப்படும் முட்டை குவியல்கள் மற்றும் இளம்புழுக் கூட்டங்களை அழிக்க வேண்டும். விதைத்த 7 ஆம் நாள் அசாடிராக்டின் 1 சதம் (வேப்ப எண்ணெய்) 2 மிலி ஒரு லிட்டர்; தண்ணீருடன் கலந்து தெளிப்பதன் மூலம் தாய் அந்துப்பூச்சிகள் பயிரில் முட்டைகள் இடுவதை தவிர்க்கலாம்.
மெட்டாரைசியம் அனிசோபிலே மருந்தை ஹெக்டேருக்கு 4 கிலோ வீதம் விதைத்த 15-20 நாள்களுக்கு மேல் தெளிக்கலாம். சாம்பல், மணல் ஆகியவற்றை குருத்தில் இடுவதன் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.