விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சல் நிலையங்களில் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம் என விருதுநகர் கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் ம.நிரஞ்சனாதேவி கூறினார்.
இது தொடர்பாக அவர் சிவகாசியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: படித்த இளைஞர்கள் உள்ளிட்டோர் வேலைவாய்ப்புக்காக மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்வார்கள்.
அதுபோல, விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய இடங்களில் உள்ள தலைமை அஞ்சல் நிலையங்களில் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள், அஞ்சலகத்திற்கு வந்து தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம்.
தற்போது கணினி மயமாகி விட்டதால், அஞ்சல் நிலையங்களில் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்பவர்களின் விபரங்களையும், பதிவினை புதுப்பிப்பவர்களுடைய விவரங்களையும், அஞ்சலகத்திருந்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு ஆன் லைன் மூலம் அனுப்பிவிடுவோம். பின்னர் வேலைவாய்ப்பு குறித்து பதிவு செய்துள்ளவர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிவிக்கப்படும். இந்த வசதி இருப்பது மக்களுக்கு பலருக்குத் தெரியவில்லை. பொது மக்கள் மாவட்டத்தில் உள்ள 4 தலைமை அஞ்சல் நிலையங்களில் உள்ள இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.