சாத்தூரில் சிற்றுந்துகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள படந்தால், சத்திரபட்டி, சடையம்பட்டி, ஒ.மேட்டுப்பட்டி, வெங்கடாசலபுரம், ராமலிங்காபுரம், அம்மாபட்டி, சந்தையூர் ஆகிய பகுதிகளுக்கு 7-க்கும் மேற்பட்ட சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இச்சிற்றுந்துகளின் ஓட்டுநர்கள் நகரின் பல்வேறு இடங்களில் நினைத்த இடத்தில் திடீரென நிறுத்துகின்றனர்.
இதனால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் சிற்றுந்துகளுக்கென அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்களில் நிறுத்தாமல் சாலைகளிலே ஆங்காங்கே நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
பிரதான சாலையில் தான் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அவசர தேவைகளுக்காக செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட சாலையில் செல்ல முடியாத நிலையை சிற்றுந்துகள் ஏற்படுத்துகின்றன.
இதுகுறித்து போக்குவரத்து காவலர்களும் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் நலன்கருதி போக்குவரத்து போலீஸார் முறையான நடவடிக்கை எடுத்து சிற்றுந்துகளின் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இதுபோன்ற இடையூறுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.